Monday, February 16, 2009

சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......


இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!

சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

அஷ்டமாசித்துக்கள்::

* அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
* மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
* லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
*கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
*பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
*பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
*ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
*வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

Sunday, February 15, 2009

சகாப்தக் காதல்..........


சிகாகோவில் உள்ள ஸிட்லி ஆஸ்டின் என்னும் புகழ்பெற்ற சட்ட நிறுவனம் ஒன்றில், மிஷேல் ராபின்சன் எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம். அந்த நிறுவனத்தின் உயர் பதவியை ஏற்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாக மனது என்று இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணிபுரிந்தார் மிஷேல். இருவருமே கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் மிஷேலுக்கு. அப்போதுதான் நுட்பமான அறிவு கொண்ட மிஷேலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது அவருக்கு. இந்த பெண் என்னுடைய வாழ்க்கைத் துணையாக அமைந்தால் என்ற ஆசையும் ஏற்பட்டது.

தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார் அந்த இளைஞர். ஆனால் அடுத்த வினாடியே அந்த விருப்பத்தை நிராகரித்தார் மிஷேல்.

அன்று மிஷேல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதை கவரும் வழிதெரியாமல் தவித்த அந்த நபர்தான் இன்று ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமெரிக்காவின் அதிபராக வீற்றிருக்கும் பராக் ஒபாமா.

மிஷேல் தன்னை நிராகரித்த போதிலும், மனம் தளரவில்லை ஒபாமா. தன் அபரிமிதமான அன்பை அவருக்கு தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்தார். வேலையில் ஒபாமா காட்டுகிற ஈடுபாடு, சக மனிதர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றால் அவர் மீது ஏற்கனவே மிஷேலுக்கு இருந்த மரியாதை காதல் என்ற புதுவடிவம் எடுத்தது. ஒருநாள் தன்னுடன் வெளியே வரும்படி ஒபாமா அழைக்க உற்சாகமாக சம்மதித்தார் மிஷெல். அந்த முன்னிரவில் சின்ன புன்னகையுடன் மெல்லிய தலையசைப்புடன் ஒபாமாவிடம் தன் காதலைச் சொன்னார். வானமே வசப்பட்டது போல் பெருமிதம் கொண்டார் ஒபாமா.

அரசியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒபாமா, படிக்கிற காலம் துவங்கி எளிய வர்க்கத்தினரது சமுதாய பொருளாதார முன்னேற்றத்துக்காக போராடியவர். மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டுமெனில், அரசியல்தான் சரியான களம் என்ற எண்ணம் கொண்டவர். மிஷெலின் காதலும், தோழமையும், அண்மையும் அவரை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தின. சாதனைகள் பல புரியும் தன்மைகள் தமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஒளி பாய்ந்தது அவருக்குள்ளே.

ஹார்வர்டு லா ரெவியூ என்ற சட்டப் பதிப்பு நிறுவனத்தின் முதல் கருப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. மதிப்பு மிக்க இப்பதவியை அடுத்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கெளரவங்கள் மொத்தமும் அவரது க்ரீடத்திற்கு இறகுகளாயின.
நாடி வந்த கெளரவங்களும் தேடி வந்த பதவிகளும் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டன. 1990 ஆம் ஆண்டு அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைத்த ஒபாமா, அடுத்தடுத்து படுவேகமாக முன்னேறினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானவர், 1996-இல் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டசபைக்கு தேர்வானார்.

இதற்கிடையே 1992 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு அக்டோபர் 3 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்தனர் ஒபாமாவும் மிஷெலும். அன்பின் பரிசாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
நிறைவான குடும்ப வாழ்க்கை என்ற பெரும் பலம் பின்னணியில் இருக்க, ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை ஒளிவீசத் துவங்கியது. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 2004 தேர்தலில் வென்று அமெரிக்க மேல்சபை உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களை மனதில் கொண்டு சீர்திருத்த நலச்சட்டங்கள் பலவற்றையும் அமல்படுத்தக் காரணமாக இருந்தார். 2007 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மிஷெலுக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. பிரச்சாரத்தில் சற்று சோர்வாகவே இருந்த மிஷெல் திடீரென்றுதான் விஸ்வரூபம் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

அரசியலில் விருப்பமில்லாத நீங்கள் திடீரென்ற அரசியல் ஆர்வம் காட்டுகிறீர்களே ஏன் என்ற கேள்விக்கு, சிரித்தபடி மிஷெல் அளித்த பதில் என்ன தெரியுமா?
""தேர்தலில் என் ஆதரவு வேண்டுமெனில் சிகரெட் புகைப்பதை உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன். அவரும் உடனே புகைப்பதை நிறுத்தினார். நான் களமிறங்கிவிட்டேன் என்பதுதான்.""

அந்த அளவுக்கு மனைவி மேல் காதல் கொண்டவர் ஒபாமா. அந்த நேசத்தில் நெக்குருகிப் போன மிஷெல் வெறி கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2008 நவம்பர் 4 ஆம் தேதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார் ஒபாமா. இந்த சரித்திர வெற்றிக்குப் பின்னே ஒய்யாரமாக வீற்றிருந்தது அந்த சகாப்த காதல். 2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் சர்வ வல்லமை படைத்த 44 வது அதிபராகப் பதவியேற்று, சரித்திரத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார் ஒபாமா. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் மிஷெல் ஒபாமா.

Wednesday, February 11, 2009

உப்பின் உபத்திரவங்கள்


பொதுவாகவே எல்லோரும் நிறையவே ஆரோக்ய விழிப்புணர்ச்சியுடன் செயல்படுகிறோம். கலோரி கான்ஷியசாகவும் மாறிவிட்டோம். மாறி வரும் இந்நிலையைப் பார்த்து பெருமையாக இருந்தாலும், ஒரு சிறு பிரச்சனை எங்கோ இருப்பதை இன்னும் நாமெல்லாம் சரிவர உணரவில்லை. அதுதான் நம் உணவில் சேர்க்கும் உப்பு. நம் தின்பண்ட சுவை கூட்டும் உப்பு நம் ஆரோக்யத்திற்கே வில்லனாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. விளைவு, ஸ்ட்ரோக், மாரடைப்பு முற்றுப்புள்ளியாக கடைசியில் இறப்பு.

ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

** 0-6 மாத குழந்தைகள் ஒரு கிராம் உப்பை விடக் குறைவாக.
** 7 லிருந்து 12 மாத குழந்தைகள் 1 கிராம்.
** 1 முதல் மூன்று வருடக் குழந்தைகள் 2 கிராம்.
** 4 முதல் 6 வருடக் குழந்தைகள் 3 கிராம்.
** 7 லிருந்து 10 வருடக் குழந்தைகள் 5 கிராம்.
** பெரியவர்கள் 6 கிராம், அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு.

உணவில் அடங்கியுள்ள உப்பை அளப்பது கடினமாது. ஏனென்றால், காய்கறிகளிலும் பழங்களிலும் கூட உப்பு அடங்கியுள்ளது. ஆனால் கடைகளிலிருந்து வாங்கிய உணவுப் பண்டங்களில் ஒரு சிறு அட்டவணையில் உப்பின் அளவு சோடியம் என்ற பெயரில் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி 0.5 கிராமுக்கு அதிகமாக சோடியம் அடங்கிய 100 கிராம் உணவுப் பொருட்கள் ஆரோக்யத்திற்கு அவ்வளவு உகந்ததல்ல.

பதப்படுத்தப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட மாமிசம் எல்லா வகையான பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைகள், ஸ்நாக்ஸ், ப்ரெட் மற்றும் பிஸ்கெட் வகைகள், கடையில் வாங்கும் ஊறுகாய் வகைகள் உணவுக் காப்பினியான சோடியம்-பை-கார்பனேட் என அறியப்படும் பேக்கிங் சோடா, MSG என அறியப்படும் உணவுக்கு சுவை கூட்டும் மோனோ சோடியம் க்ளூக்கமேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டாலும் பெண்களின் கால்ஷியத்தை அழித்து எலும்புகளை பலவீனமாக்கி, ஆஸ்டியோபொரோஸிஸிடம் ஒப்படைத்துவிடும்.

Tuesday, February 10, 2009

நீங்களும் IAS ஆகலாம்


"ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது.

சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது:
IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் விவரம்:
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.

நுழைவுத் தேர்வு:
நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.

இறுதித் தேர்வு:
இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள்.
* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.
* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.
மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.
* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)
* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).
* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகள், ஹிந்தியிலும் எழுதலாம்).
இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.

டிப்ஸ்::
* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.
*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல.
* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.
* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும்.
* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.
* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.
* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.

Saturday, January 24, 2009

தத்து எடுக்கும் முறை


தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 17க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் உள்நாட்டிலும், சில வெளிநாடுகளிலும் குழந்தைகளை தத்து கொடுக்கின்றன.
தத்து எடுப்பதற்கு முதலில், தம்பதியர்களின் மனப்பூர்வ சம்மதம் அவசியம். இரண்டு பேர் சேர்ந்தேதான் தொண்டு நிறுவனத்தை அணுக வேண்டும். அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் தத்தெடுப்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். அதிலும், கூட்டுக் குடும்பத்திலிருந்தால் வீட்டிலுள்ள அனைவருக்கும் தத்தெடுப்பதைப் பற்றி தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
தத்தெடுக்க விரும்பும் தம்பதியிரிடம் திருமணமாகி எத்தனை ஆண்டுகளாகின்றன?? குழந்தைகள் உள்ளனரா, இல்லையெனில் என்ன காரணம்?? இனி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?? தத்தெடுப்பதற்கு என்ன காரணம்?? தத்தெடுத்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வீர்களா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் தருகிற பதிலைக் கொண்டுதான் தத்து கொடுப்பது பற்றிய முதற்கட்ட முடிவை எடுப்பார்கள்.
தத்து கொடுப்பது என முடிவானதும், சம்பந்த்தப்பட்ட தம்பதியரின் பெயர்களை பதிவு செய்வார்கள். இதற்கான பதிவுக் கட்டணம் நூறு ரூபாயிலிருந்து இருநூற்றைம்பது ரூபாய் வரை இருக்கும். இதையடுத்து அவர்கள் தத்து வேண்டி ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கூடவே சில சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது தம்பதியின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம், வயது சான்றிதழ், சொத்து வருமானம், மற்றும் கடன் விவரங்கள், குழந்தையை வளர்க்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இருப்பதற்கான சான்றிதழ், குடும்பத்தாரது ஒப்புதல் கடிதம், மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவரது ஒப்புதல் கடிதங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இவை சரிபார்க்கப்பட்ட பிறகு, தத்து எடுக்க விரும்புபவருடைய வீட்டுக்கு சமூக சேவகர் ஒருவர் செல்வார்.
அந்த குடும்ப சூழல், அவர்கள் கொடுத்த சான்றிதழ் எல்லாம் சரிதானா என்பதையெல்லாம் அந்த சமூக சேவகர் கண்டறிந்து ஒரு ஒப்புதல் அறிக்கை தருவார். அதனடிப்படையில்தான் தத்து கொடுப்பது குறித்த இரண்டாம் கட்ட முடிவு எடுக்கப்படும்.
தம்பதியின் உருவம், நிறம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி உள்ள குழந்தையைதான் தம்பதியிடம் காட்டுவார்கள் (மற்றபடி குழந்தை இருக்குமிடத்திற்கு தத்து எடுப்பவர்களை அனுமதிக்கமாட்டார்கள்).
பின்னர் இருபது ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் மூலம் தம்பதியிடம் எழுதி வாங்கிக் கொண்டு தற்காலிகமாக குழந்தையை ஒப்படைப்பார்கள். மூன்று முதல் ஆறு மாதம் வரை பலமுறை தம்பதியையும், குழந்தையையும் சந்தித்து குழந்தைக்கும் அவர்களுக்குமிடையே அந்யோன்யம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார்கள்.
இதில் அவர்களுக்கு முழு சம்மதம் ஏற்பட்ட பிறகுதான், தம்பதி அளித்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். இதன் பிறகு குழந்தையை தத்து கொடுக்கும் நிறுவன அலுவலர் ஆகியோரிடம் கோர்ட் விசாரித்து, சட்ட ரீதியாக அனுமதியை வழங்கும். இவையனைத்துமே குழந்தையின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளே!!
குழந்தையை தத்து எடுத்ததும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அது அவர்களின் சொந்தக் குழந்தையாகிவிடும். பிறப்பு சான்றிதழைப் பெறுவதும் மிக அவசியம். பிறகு தத்தெடுத்தவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தவிர வேறு எவரும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.
பெற்றோர்கள் குழந்தையை தத்து கொடுத்த நிறுவனத்திற்கு பராமரிப்புக் கட்டணமாக அதிகபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது அரசு விதி. அதே போல் மருத்துவ செலவுத் தொகையாக ரூபாய் ஒன்பதாயிரம் செலுத்த வேண்டும். தவிர வக்கீல் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவையும் உண்டு.
*** குழந்தையை தத்து எடுக்க விரும்புகிற கணவன் மனைவி இருவருடைய வயதின் கூட்டுத் தொகை 90க்குள் வந்தால் அவர்கள் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கலாம். வயதின் கூட்டுத்தொகை 91 என்றால் ஒரு வயது குழந்தையையும், 92 எனில் இரண்டு வயது குழந்தையையும் தத்து எடுக்கலாம். கூட்டுத் தொகை 100 ஐத் தாண்டினால் தத்து எடுக்க அனுமதி இல்லை.
*** குழந்தையின் வயது, ஐந்திற்கு மேல் எனில் அந்த குழந்தையுன் சம்மதம் மிக மிக முக்கியம்.
*** கணவன் இல்லாத நிலையில் கூட ஒரு பெண் தத்தெடுக்க முடியும். இப்படி தத்தெடுக்கும் போது குழந்தைக்கும் அவருக்கும் இடையே 21 வயது வித்யாசம் இருக்க வேண்டும்.
*** பெண் துணை இல்லாத ஆணுக்கு தத்து கொடுக்க முடியாது.

Thursday, November 27, 2008

திருப்பதி திருமலை!!


திருப்பதி திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையானுக்கு தனியாகப் பெயரில்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்கு சொந்தக்காரர். அதன் உரிமையாளர், அதன் உடையவர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை, வட மொழியில் சொல்வதானால் வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது வேங்கடத்துக்கு உரிமையானவர் அல்லது ஈஸ்வரர். மற்ற கோவில்களில் இப்படி இல்லை. கபாலீஸ்வரரை மயிலாப்பூர்காரர் என்று எவரும் கூறுவதில்லை. மதுரையிலிருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று எவரும் சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டும் வேங்கடமலையை மையப்படுத்திய காரணப் பெயரால் சொல்கிறோம்? அவருக்கென்று பெயர் இல்லையா? நம் முன்னோர்களான வேத கால ரிஷிகளும், சித்தர்கள், அகஸ்தியர் போன்றோர்களும், இவர் யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா ? என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, தாளப்பாக்கம் அன்னமையா இவர் பெயரில் 32 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பேர்ப்பட்ட அவருக்கே வேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. HMV கேஸட் நிறுவனத்தார் பாலாஜி பஞ்சரத்னம் என்ற பெயரில் கேஸட் வெளியிட்டனர். முதன் முதலாக எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமையா பாடல்களை அதில் பாடினார்கள். அப்பாடல்களைத் தேர்வு செய்தவர் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள். திருவையாறு தியாகய்யர் பூர்வி கல்யாணி ராகத்தில், நீ யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா என்று தெரியவில்லையே என்று வேங்கடமுடையானை தரிஸனம் செய்த பிறகு பாடியிருக்கிறார். ஆகவே, மற்ற தெய்வங்கள் போல் வேங்கடமுடையானுக்கு தனி பெயர் கிடையாது.சுமார் 500 வருஷங்களாக இவருக்கு சீனிவாசன் என்ற பெயரும் உண்டு. குணசேகரம், உப்பிலியப்பன் கோவில், வையாவூர் மற்றும் பல விஷ்ணு கோவில்களிலும் உள்ள கடவுளர்க்கு சீனிவாசன் என்ற பெயர் உண்டு. யாரந்த சீனிவாசன்? க்ருஷ்ண பகவான் தான் வாசுதேவன், இவருடைய பிள்ளை ப்ரத்யும்னன். அனிருத்தன் க்ருஷ்ணனின் பேரன். இந்த வாசுதேவன் தான் சீனிவாசன். வாசுதேவன், ராமன், க்ருஷ்ணன், சீனிவாசன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரங்கள். மற்ற கோவில்களில் இருப்பது விஷ்ணு சிலைகள். அதனால் அக்கோவில்களில் இருக்கும் சிலைகளை சீனிவாசன் என்று அழைக்கலாம். திருமலை கோவிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்த சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் இவரை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகிலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக போக முத்திரைகள் இருக்கின்றன. இவை அலர்மேல் மங்கையின் அம்சங்கள். அலர்மேல் மங்கையும், ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள். ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார். அதே போல் இவருக்கு ஸ்தல புராணம் கிடையாது. இப்போது இருக்கிற ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவேங்கடமுடையானைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருமலையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் மலைகள் பற்றிய விவரம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் எப்போது திருமலைக்கு வந்தார்? திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன. இதன் ஆதாரம்., முதலில் அறிவியல் அடிப்படையில் ஆதாரத்தைப் பார்ப்போம். திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது என்று பொருள். .............

என்ன எப்போ கூட்டிட்டு போறீங்க ??


வணக்கங்க!! நான் பப்பி பேசறேன். தேன் நிறத்தில புசு புசுனு அழகா இருப்பேன். காதுகள் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நீங்களெல்லாம் உங்க அனுபவங்கள சொல்லும்போது நான் மட்டும் சொல்லக் கூடாதா? அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து கொண்டு வந்தீங்க?? இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா?? அபசகுனம்னு சொன்னேனா? ஆனா என்ன விட மாமிதான் ரொம்ப வாடி போய்ட்டா. கிட்டு மாமா என்ன விடவே இல்ல....அடிச்சு துரத்திட்டா. ரெண்டு நாள் அலஞ்சேன். அப்பறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன். அங்க முனியம்மா வீட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்ன பாத்ததும் எனக்கும் கொஞ்சம் போட்டாங்க. நான் வாலை ஆட்டிகிட்டே நின்னேன். அங்கேயே தங்கிட்டேன். காலம் அப்படியே போச்சு. முனியம்மாவுக்கு ரெண்டு பசங்க. அவங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முனியம்மாவுக்கு ஆசை. ஆனா அவ புருஷன் தண்ணியடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி உதை சித்ரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லணும்னா நாய் பொழப்புனு சொல்லுவாங்க. ஆனா இந்த மாதிரி சில மனிஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம். ஒரு நாள் நான் அஞ்சு குட்டிங்கள பெத்தேன். எல்லாம் பக்கத்து தெரு கருப்பு நாயோட ஏற்பட்ட லவ்ஸ் தான். குட்டிங்க எல்லாம் அவ்வளவு அழகு....என்ன மாதிரியே!! அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே!! இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம்!! என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? என்னோட அடையாளம் தெரியுமில்லையா? தேன் நிறத்துல அழகா புசு புசுன்னு இருப்பேன். காதுகள் கொஞ்சம் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். பப்பினா வாலாட்டுவேன்.